கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Friday, January 21, 2011

தீண்டாமை

ஆசையாய்
அடம்பிடித்து வாங்கிய
மயில் கழுத்து பார்டரில்
தாழம்பூ தவழும்
பட்டுப் பாவாடை
பத்திரமாய்த்
தூங்குகிறது பெட்டியில்.

பலவித பலகாரங்களைப்
பட்டியலிடுகிறாள் அம்மா
என்னை
பட்டினி போட்டுவிட்டு....

அடிவயிற்றில்
பிசையும்
வலியோடு அவளை
அணைத்து அழ
நெருங்குகையில்
'தொடாதே...
தீட்டு ஒட்டிக்கும்'
என்கிறாள் கோபமாக!

அப்பா முதுகில்
உப்பு மூட்டை தொங்கியபடி
பழிப்புகாட்டி
சிரிக்கிறாள் இன்னும்'
பருவமெய்தாத் தங்கை.

கருகும் பூக்களென
கைப்பட்டாலென
செடிக்கு நீரூற்றும் உரிமையும்
மறுக்கபடுகிறது எனக்கு.

சனி மூலை, அக்னி மூலை
தெற்கு மூலை, குபேர மூலை
என எந்த மூலையிலும்
எனக்கோர் இடமின்றி
தள்ளப்படுகிறேன்
வீட்டுக்கு வெளியே.

பொம்பளத் தீட்டு
அம்மனுக்கு ஆகாதாம்.
அம்மனும் பெண்தானே....
அப்புறமென் ஆகாது?

தனிமை மட்டுமே
துணையிருந்த இரவில்
இடி சத்தத்துக்கும்
பூனையின் அலறலுக்கும்
பயந்து
தூக்கம் தொலைத்த
இரவின் மறுநாள்
இரும்பு துண்டை நீட்டி
அம்மா சொன்னாள்...
'வெச்சுக்க... இல்லேன்னா
பேய் பிடிச்சுடும்!'

வேகமாய்
வீசி எறிகிறேன் அதை.
கோபமென அவள்
நினைத்திருக்க கூடும்.
உண்மையில்,
பேய்காவது என்னைப்
பிடிகட்டுமே என்கிற
நப்பாசைதானே தவிர
மற்றபடி
வேறொன்றும் இல்லை!.

- சுமதி பெனடிக்ட்

No comments:

Post a Comment